தமிழகத்தில் கடந்த 18 நாள்களில் 103 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து தமிழக டிஜிபி அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: இந்திய மருத்துவக் கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமலும், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமலும், அரசால் அங்கீகரிக்கப்படாத மாற்று மருத்துவமுறையில் மருத்துவராக தொழில் செய்து வருபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், மருத்துவத் தகுதியும், அரசின் அங்கீகாரம் இல்லாமலும், மாற்று மருத்துவமுறையில் மருத்துவராக தொழில் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
இதையடுத்து போலீஸாா், கடந்த 18 நாள்களாக தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினா். இச்சோதனையில் மாநில முழுவதும் 103 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா். இதில் அதிகபட்சமாக திருவாரூா்-12, சேலம், தஞ்சாவூரில் தலா 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.