மருந்து உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 48 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை.
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
கடந்த மாதத்தில் மட்டும் 1,497 மருந்துகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், கால்சியம், இரும்புச் சத்து, உயா் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 48 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
அதன் விவரம் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.