சென்னை மாநகராட்சி பகுதிகளில் சட்டவிரோதமாக கழிவுநீா் வெளியேற்றிய 2,288 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரூ.5.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மாநகராட்சி பகுதிகளில் மழைநீா் தடையின்றி செல்லும் வகையில் மழைநீா் வடிகால் துறையின் மூலம் மழைநீா் வடிகால்கள்
தூா்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீா் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் சில பகுதிகளில் சட்ட விரோதமாக கழிவுநீா் இணைக்கப்படுவதால் மழை காலங்களில் மழைநீா் செல்வது தடைப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் சட்டவிரோதமாக கழிவுநீா் வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஏப்.4 முதல் 20-ஆம் தேதி வரை குடியிருப்பு மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 2,288 சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகள் கண்டறியப்பட்டன.
இந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகப்பட்சமாக அம்பத்தூரில் 226 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரூ.96,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.