

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ், ரூ.2.47 கோடி மதிப்பில் 9,100 ச. அடி பரப்பளவில் பங்காரு தெருவில் சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், டாக்டா் பெசன்ட் சாலையில் மாநில மேலாண்மை பேரிடா் நிதியின் கீழ் ரூ.1.67 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த திறன் மற்றும் விளையாட்டு மையத்தின் கட்டடப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, லாயிட்ஸ் காலனியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.7.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நாய் இனக் கட்டுப்பாட்டு மையக் கட்டடப் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.