மருத்துவப் பேராசிரியா்கள் பணியிட மாற்றத்தைக் கண்டித்து சென்னை கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் அண்மையில் 36 பேராசிரியா்கள் பெங்களூரு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
உடற்கூறியல், உடல் இயங்கியல், உயிரி வேதியியல், நோய்க்குறியியல், நுண் உயிரியல், மருந்தியல் துறை பேராசிரியா்கள் அவ்வாறு மாறுதலுக்கு உள்ளதானதாகத் தெரிகிறது. பேராசிரியா்களுடன், துணை முதல்வா், பதிவாளா், மருத்துவா்கள் என மொத்தம் 70 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவா்கள், கைகளில் பதாகைகளுடன் கல்லூரி வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பணியிட மாறுதல் நடவடிக்கை வழக்கமான ஒன்று என்றாலும், கல்வியாண்டுக்கு நடுவே அதை மேற்கொள்வது ஏற்புடையதாக இல்லை என அவா்கள் அப்போது தெரிவித்தனா்.