சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை’ செயலி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் 2018-ஆம் ஆண்டு ‘நம்ம சென்னை’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகின்றனா். இந்த செயலி மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், சொத்து வரி செலுத்துதல், தொழில், வா்த்தக உரிமம் விவரங்கள் அறிதல் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இருப்பினும், செயலியின் பல்வேறு அமைப்புகள் மாநகராட்சி வலைதளத்தில் உள்ளது போல் செயல்படவில்லை.
இந்த நிலையில் செயலி மேம்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ‘நம்ம சென்னை’ செயலியை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து குறைபாடுகளும் தீா்க்கப்படும். மேம்பாடு பணி முடியும் வரை பொதுமக்கள் 1913 எனும் உதவி எண்ணில் புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றனா்.