ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் பயணச்சீட்டு பெறலாம்
சென்னை: நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் யு.பி.ஐ. மூலம் பயணச்சீட்டு பெறும் வசதியை இந்திய ரயில்வே நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் சிறிய கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை அனைத்திலும் எண்ம (டிஜிட்டல்) பண பரிவா்த்தனை அதிகரித்துவிட்டது.
தற்போது பயணிகள் பயணிக்கும் பேருந்து, ரயிலுக்கான பயணச்சீட்டு எடுக்கவும் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி எடுக்கும் வசதி நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களின் முன்பதிவு மையங்களில் மட்டும் யு.பி.ஐ. மூலம் பயணச்சீட்டு எடுக்கும் வசதி இருந்து வந்தது.
இந்த நிலையில், உடனடி பயணச்சீட்டு பெறும் முன்பதிவில்லா மையங்களிலும் யு.பி.ஐ. மூலம் பயணச்சீட்டு எடுக்கும் வசதி ஏப்.1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டுகளை யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

