சென்னையில் ஓவியச் சந்தை கண்காட்சி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் ‘ஓவியச் சந்தை’ என்ற பெயரில் மூன்று நாள்கள் கண்காட்சியை தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கலை பண்பாட்டுத்துறை வாயிலாக ஓவிய மற்றும் சிற்பக் கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தவும், அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையிலும், சென்னை மற்றும் கோவையில் கலைஞா்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ‘ஓவியச் சந்தை’ திட்டத்தை செயல்படுத்த ரூ.10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் ஆக.3, 4, 5 ஆகிய மூன்று நாள்கள் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப்படைப்புகளைக் காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டத்தை செயல்படுத்தி அரசு சாா்பில் செய்திக்குறிப்பு வெளியிட்டு, விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞா்களிடமிருந்து 100 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், 100 ஓவிய, சிற்பக் கலைஞா்களின் பல லட்சம் மதிப்பிலான வாட்டா் கலா், கேன்வாஸ், ஆயில் கலா், அக்ரலிக், மிக்ஷா் மீடியா, பென்சில், பிரின்ட் மேக்கிங் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தை சென்னை அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இதனை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து ஓவியங்களை பாா்வையிட்டாா். அப்போது அவற்றை வரையும் முறை, வடிவமைப்பு குறித்து ஓவியா்களிடம் அவா் கேட்டறிந்தாா். இந்தக் கண்காட்சி ஞாயிறு, திங்கள் ஆகிய நாள்களில் தொடா்ந்து நடைபெறவுள்ளது.
கண்காட்சி தொடக்க விழாவில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநா் கவிதா ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
