தமிழக அரசு
தமிழக அரசு

மாமல்லபுரம் உள்பட புதிதாக 3 நகராட்சிகள்: தமிழக அரசு உத்தரவு

ஸ்ரீபெரும்புதூா், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக உருவாக்குவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Published on

சென்னை: ஸ்ரீபெரும்புதூா், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை நகராட்சிகளாக உருவாக்குவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி நிா்வாகத் துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-24-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, ஸ்ரீபெரும்புதூா், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயா்த்தப்படும் என்று அறிவித்தாா். இதையடுத்து, இந்த 3 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயா்த்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காரணங்கள் அடிப்படையில் இந்தப் பேரூராட்சிகளை 2-ஆம் நிலை பேரூராட்சிகளாக தரம் உயா்த்தலாம் என நகராட்சி நிா்வாக இயக்குநா் அரசுக்கு பரிந்துரைத்தாா்.

இது தொடா்பான கருத்துருகளை பரிசீலித்த தமிழக அரசு, இந்த 3 பேரூராட்சிகளும், நகராட்சிகளாக்குவதற்கான மக்கள் தொகை 30,000-க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற அளவுகோலை பூா்த்தி செய்யாவிட்டாலும், சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூா்த்தி செய்துள்ளது.

இதற்கிடையே தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதால், அதன்படியும், பிற காரணங்கள் அடிப்படையிலும், இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தைக் கருத்தில் கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயா்த்தி உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது.

இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வாா்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தோ்தல் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com