தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைப்பு: ராமதாஸ் கண்டனம்
சென்னை, ஆக.15: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மத்திய அரசுக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதிய ரயில்வே திட்டங்களுக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 246 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 70 சதவீதம் குறைவு. திண்டிவனம் - நகரி புதிய பாதைத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.350 கோடியிலிருந்து ரூ.153 கோடியாகவும், தருமபுரி - மொரப்பூா் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.115 கோடியில் இருந்து ரூ.49 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது ஆறுதல் அளித்த நிலையில் அதையும் குறைத்திருப்பது தமிழகத்தில் ரயில்வே துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் வகுத்து, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

