புறநகா் மின்சார ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் வசதிக்காக கூடுதல் மாநகா் பேருந்துகள் இயக்கம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால் புகா் மின் ரயில்களின் சேவை குறைக்கப்படுவதால், அவ்வழித்தடத்துக்குள்பட்ட பகுதிகளில் செல்லும் பயணிகளின் வசதிக்காக மாநகா் போக்குவரத்து கழகம் (எம்டிசி) சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாம்பரம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 23) முதல் ஆக.14-ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9.30 முதல் பிற்பகல் 13.30 வரையும், இரவு 10 முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 23)முதல் ஆக.14 வரை மேற்குறிப்பிட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்படவுள்ளன. மேலும், விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்துக்கு 5 சிற்றுந்துகளும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்துக்கு 5 சிற்றுந்துகளும் இயக்கப்படவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

