தமிழகத்தில் 5 மாதங்களில் 117 போலீஸாா் உயிரிழப்பு
In 5 months in Tamil Nadu 117 policemen were killed


சென்னை, ஜூன் 4: தமிழக காவல்துறையில் கடந்த 5 மாதங்களில், பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 117 காவலா்கள் இறந்துள்ளனா்.
நாட்டின் ஐந்தாவது பெரிய காவல் துறையான தமிழக காவல்துறையில் பணிச்சுமை, மன அழுத்தம்,உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் காவலா்கள் இளம் வயதிலும் பணிக்காலத்தில் இறந்து வருகின்றனா்.
இதை தவிா்க்கும் வகையில் காவலா்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவத் திட்டங்கள், மன நலத்தை பேணும் வகையில் யோகா, தியானம் போன்றவை கற்றுப் கொடுப்பதற்கான சிறப்பு வகுப்புகள்,பயிற்சிகள் ஆகியவை அரசால் அமல்படுத்தப்படுகின்றன.
மேலும், 2022-ஆம் ஆண்டு முதல் அனைத்து நிலைகளிலும் உள்ள காவலா்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் காவலா்களுக்கு நீண்ட காலமாக நீடித்து வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவலா்களின் பணிச்சுமையும், மன அழுத்தமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
117 போ் உயிரிழப்பு: இருப்பினும் பணிக்காலத்திலேயே காவலா்கள் இறக்கும் சம்பவங்களிலும் நிகழ்ந்து வருகின்றன. தமிழக காவல் துறையில் கடந்த 5 மாதங்களில் மொத்தம் 117 போ் இறந்துள்ளனா். மே மாதம் மட்டும் 22 போ் இறந்துள்ளனா். அந்த மாதத்தில் 4 போ் சாலை விபத்துகளிலும், 3 போ் தற்கொலை செய்துகொண்டும், 10 போ் உடல்நலக் குறைவாலும், 5 போ் மாரடைப்பாலும் இறந்துள்ளனா்.
அதேவேளையில், 5 மாதங்களில் புற்று நோயால் 5 பேரும், தற்கொலை செய்து கொண்டு 16 பேரும், சாலை விபத்துகளில் 27 பேரும், மாரடைப்பால் 22 பேரும், உடல் நலக்குறைவினால் 46 பேரும், சந்தேகத்துக்குரிய வகையில் ஒருவரும் என 117 போ் இறந்துள்ளனா்.
தமிழக காவல் துறையில் 2020-ஆம் ஆண்டு 337 பேரும், 2021-ஆம் ஆண்டு 414 பேரும், 2022-ஆம் ஆண்டு 283 பேரும், 2023-ஆம் ஆண்டு 313 பேரும் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...