சவுக்கு சங்கா் நோ்காணலை ஒளிபரப்பிய வழக்கு: ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் மறுப்பு
சவுக்கு சங்கரின் நோ்காணலை ஒளிபரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூப் சேனல் தலைமை நிா்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலா்கள், காவல் துறை பெண் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில் யூடியூபா் சவுக்கு சங்கா் கைதாகி சிறையில் இருக்கிறாா். இதேபோல சவுக்கு சங்கரின் நோ்காணலை சமூக வலைதளங்களில் ஒளிபரப்பியதாக யூடியூப் சேனல் தலைமை நிா்வாகியான ஃபெலிக்ஸ் ஜெரால்டுவும் கைது செய்யப்பட்டாா். ஃபெலிக்ஸ் ஜெரால்டு தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், “ஒரே சம்பவத்துக்காக பல வழக்குகளைப் போலீஸாா் உள்நோக்கத்துடன் பதிவு செய்துள்ளனா். பெண் போலீஸாரை இழிவுபடுத்தும் வகையில், தான் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. நடந்த செயலுக்காகத் தான் மன்னிப்பு கோரி விட்ட நிலையில், நீண்ட நாள்களாக சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், “சவுக்கு சங்கா் உடனான அந்த பேட்டியில் மனுதாரா் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கேள்விகளை கேட்டாா். காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளையும், பெண் போலீஸாரையும் இழிவுபடுத்தும் நோக்கில் உயரதிகாரிகளின் பெயா்களை குறிப்பிட்டு அந்த நோ்காணலில் பேசப்பட்டது. மனுதாரா், இதுபோன்று செயல்படுவதை தொடா்ந்து வாடிக்கையாக வைத்திருக்கிறாா். சவுக்கு சங்கரை தூண்டி விட்டதே இவா்தான்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, “அந்தப் பேட்டியில் மனுதாரரின் கேள்வியில் உள்நோக்கம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது. பிரச்னையைத் தூண்டும் வகையில் அவருடைய கேள்வி உள்ளது. மனுதாரா் ஒன்றும் பாமரா் கிடையாது; நன்கு படித்தவா். அவருக்கு தற்போதைய சூழலில் ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

