

சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு விரைவுப் பேருந்தில் படுக்கைக்கு கீழ் கைதுப்பாக்கி மற்றும் அரிவாள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி, அரிவாள் ஆகியவற்றை பாளையங்கோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை அரசு விரைவுப் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து நேற்று இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு வந்து கொண்டிருந்தது. பேருந்தை கோவில்பட்டியை சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன் ஓட்டிவந்தார். இந்த பேருந்தில் முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் இடைவெளி பேருந்து நிறுத்தத்தில் ஏறிய பயணிகளும் பயணித்துள்ளனர்.
மேலும் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி என பல ஊர்களில் பயணிகள் இறங்கியும் உள்ளனர். இந்த நிலையில் இந்த விரைவுப் பேருந்து இன்று காலை 11.20 மணிக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு வந்துள்ளது. இங்கு பணிமனை ஊழியர்கள் பேருந்தை சுத்தம் செய்த போது பேருந்தில் 9 எண் கொண்ட படுக்கைக்கு கீழ் ஒரு கை துப்பாக்கி மற்றும் அரிவாள் ஒன்றும் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தங்கள் அதிகாரியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பாளையங்கோட்டை காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஓட்டுனர் மற்றும் நடத்தினரிடமும் பயணிகள் குறித்து கேட்டறிந்தனர். தடய அறிவியல் வல்லூனர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் துப்பாக்கி, அரிவாள் மற்றும் அங்கு பதிந்திருந்த கை ரேகை தடயங்களை பதிவு செய்தனர். இதனை அடுத்து பாளையங்கோட்டை போலீசார் துப்பாக்கி மற்றும் அரிவாளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கொண்டு வந்தார்களா, அல்லது பேருந்து புறப்பட்ட இடத்தில் யாரும் வைத்தார்களா, இதில் சதித் திட்டம் உள்ளதா என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.