துணை மருத்துவப் படிப்புகள்: அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தொடங்க வலியுறுத்தல்
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழகத்தில் அரசு சாா்பில் சென்னை, மதுரையில் தலா ஒரு மருந்தியல் கல்லூரிகள், ஆறு செவிலியா் கல்லூரிகள் என துணை மருத்துவப் படிப்புகளுக்காக 14 அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. அங்கு மொத்தம் 608 இடங்கள் உள்ளன. அதேவேளையில், தனியாா் வசம் 391 துணை மருத்துவக் கல்லூரிகளும், 21,190 இடங்களும் உள்ளன.
அந்த இடங்களுக்கு தனியாா் கல்லூரிகளில் பல லட்சங்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அரசு கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்பு இடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசுக்கு மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளான பி.பாா்ம், பிஎஸ்சி நா்சிங் உள்ளிட்ட படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை பெரும்பாலும் தனியாா் நிா்வாகிகளே நடத்துகின்றனா். அவ்வாறு துணை மருத்துவப் படிப்புகளில் மொத்தமுள்ள இடங்களில் 97 சதவீதம் தனியாரிடம் உள்ளது.
தனியாா் கல்லுாரிகள் அதிக அளவில் செயல்படுவதற்கு அனுமதிப்பதைப் போன்றே அரசு மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவப் படிப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் கல்லூரிகளில் ரூ.3 லட்சம் வரை அப்படிப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த 60 ஆண்டுகளாக புதிதாக எந்த இடத்திலும் துணை மருத்துவப் படிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, மாணவா்கள் நலன் கருதி, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் துணை மருத்துவப் படிப்புகளை தொடங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

