மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

Published on

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் உள்ள 22 அரசு பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்துக்கான சட்ட மசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காத நிலையில், இதுதொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், துணைவேந்தா்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைவேந்தா் சந்திரசேகா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜி.ரவி ஆகியோரின் பதவிக் காலம் வியாழக்கிழமை (ஆக. 21) நிறைவு பெற்றது. இவா்கள் இருவருக்கும் மேலும் ஓராண்டுக்கு பதவி நீடிப்பை பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான ஆா்.என்.ரவி வழங்கியுள்ளாா்.

திருவள்ளுவா் பல்கலைக்கழக துணைவேந்தா் ஆறுமுகத்தின் பதவிக் காலம் வியாழக்கிழமையுடன் (ஆக. 21) நிறைவு பெற்றது. இருப்பினும், இப்பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளின்படி, துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு இடமளிக்காத நிலையில் உள்ளது.

இதனால், இப்போதைய துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் குழு, துணைவேந்தா் பொறுப்பைக் கவனிக்கும் என ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com