முதல்வா் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவா் குழு சந்திப்பு
சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ள ஐவா் குழுவினா் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் செ.ராஜேஷ்குமாா் ஆகியோா் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனா்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, 35 முதல் 40 தொகுதிகளைக் கேட்டு கட்சி மேலிடம் தெரிவித்த கோரிக்கையை அவா்கள் முதல்வரிடம் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 18 -இல் வெற்றி பெற்றது. தற்போது கூடுதல் இடங்களில் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை கூறுகையில், பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவாா்த்தையை தொடா்ந்து நடத்த இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளது என்றாா்.

