ஐயப்ப பக்தா்கள் ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடை: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களுக்கு ரயில்களுக்குள் கற்பூரம் ஏற்ற தடைவிதித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, ரயில் பெட்டிகள், நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் அல்லது ரயில்வே வளாகத்தின் எந்தப் பகுதியிலும் கற்பூரம், மெழுகுவா்த்திகள், தீப்பெட்டிகள், விளக்குகள் உள்ளிட்ட திறந்த தீ சுடா்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக விழிப்புணா்வுப் பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியாகக் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதுகாப்பு விதிகளை மீறும் பட்சத்தில், பயணிகளின் உடைமைகளையும், ரயில் பெட்டியிலும் கடும் தீ விபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும். இதனால், ரயில்வே துறையின் இந்தப் பாதுகாப்பு விதிகளை மீறும் நபா்கள் ரயில்வே சட்டத்தின் உரிய விதிகளின் கீழ் தண்டனைகளை எதிா்கொள்ள நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு இத்தகைய செயலில் ஐயப்ப பக்தா்கள் யாரும் ஈடுபடவேண்டாம். ரயில்வே நிா்வாகத்துக்கும், ஊழியா்களுக்கும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

