ஈஷா பராமரிக்கும் மயானங்களில் இலவச தகன சேவைத் தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளை பராமரிக்கும் மயானங்களில் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டு உள்ளது.
Published on

தமிழகம் முழுவதும் ஈஷா அறக்கட்டளை பராமரிக்கும் மயானங்களில் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டம்’ தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஈஷா தகன சேவைப் பிரிவின் தமிழக ஒருங்கிணைப்பாளா் மா குருதாசி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈஷா அறக்கட்டளை தமிழக அரசுடன் இணைந்து சென்னை, வேலூா், தஞ்சாவூா், நெய்வேலி மற்றும் கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், வீரகேரளம், துடியலூா், போத்தனூா், வெள்ளலூா், ஆலாந்துறை, தொண்டாமுத்தூா், காரமடை, கவுண்டம்பாளையம் உள்பட 17 இடங்களில் எரிவாயு தகன மயானங்களைப் பராமரித்து, இயக்கி வருகிறது.

விரைவில் மேலும் 3 மயானங்களின் பராமரிப்பையும் ஈஷா ஏற்க உள்ளது. ஈஷா நிா்வகிக்கும் மயானங்களில் பழமையான சடங்குகள், சக்திமிக்க இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான உடல்கள் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளன.

ஈஷா அறக்கட்டளையால் பராமரிக்கப்படும் எரிவாயு மயானங்களில் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு இலவச தகன சேவை வழங்கும் திட்டத்தை’ நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சென்னையில் செவ்வாய்க்கிழமை (டிச.9) தொடங்கி வைத்தாா்.

இந்தச் சேவை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை பராமரிக்கும் மயானங்களில் இந்த இலவச சேவையைப் பெறலாம்.

நாடு முழுவதும் 3,000 மயானங்களைத் தத்தெடுத்து சிறப்பாக செயல்படுத்துவதே ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் நோக்கம் என்றாா் அவா். பேட்டியின்போது ஈஷா பொறுப்பாளா் ஆ.யுவராஜா உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com