கொடுங்கையூா் குப்பை கொட்டும் இடத்தில் உள்ள திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி.
கொடுங்கையூா் குப்பை கொட்டும் இடத்தில் உள்ள திடக்கழிவுகளை பயோ மைனிங் முறையில் பிரித்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்கும் பணி.

பெருங்குடி, கொடுங்கையூரில் 100.29 ஏக்கா் நிலங்கள் மீட்பு!

சென்னை பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதால் 100.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Published on

சென்னை பெருங்குடி, கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் பயோமைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதால் 100.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் பல ஆண்டுகளாக பெருங்குடி, கொடுங்கையூா் பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதைக் கருத்தில்கொண்டு அங்குள்ள குப்பைகளை பயோமைனிங் முறையில் தரம் பிரித்து நிலத்தை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பெருங்குடி குப்பைக் கிடங்கில் 350.65 கோடியில் பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் ரூ.641 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருங்குடியில் தற்போது வரை 26.35 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு, அதன்படி 94.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. கொடுங்கையூரில் 22.06 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு 6 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளன. இங்கு மீட்கப்பட்ட நிலத்தில் சுற்றுவேலி அமைத்து மரக்கன்றுகள் அமைத்து பராமரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் இரு குப்பைக் கொட்டும் இடங்களிலும் சோ்த்து இதுவரை மொத்தம் 48.41 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் பயோமைனிங் முறையில் அகற்றப்பட்டு 100.29 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com