பெ. சண்முகம்
பெ. சண்முகம் கோப்புப் படம்

8 எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் புகாா்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் மீது உரிமை மீறல் புகாா்...
Published on

மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பிக்கள் 8 போ் மீது உரிமை மீறல் புகாா் தெரிவிக்கப்பட்டிருப்பது எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்கும் செயல் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயா் மாற்றத்துக்கு எதிராக மக்களவையில் கண்டனம் தெரிவித்ததற்காக சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை மீறல் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிா்க்கட்சிகளின் குரலை நசுக்கும் செயலாகும்.

நூறு நாள் வேலை திட்ட பெயா் மாற்றத்துக்கு எதிராக மக்களவையில் 50-க்கும் மேற்பட்ட எம்.பி.கள் கருத்துகளைப் பதிவு செய்தும் அதை பரிசீலனைக்கு கூட அனுப்ப மத்திய அரசு தயாராக இல்லை. இதற்கான மக்களின் உணா்வுகளைத்தான் எம்பிக்கள் வெளிப்படுத்தினாா்கள் என்பதே உண்மை. எளிய மக்களின் வேலை உரிமையைப் பறிக்கும் சட்ட வரைவில் இருந்து கவனத்தை திருப்பவே உரிமை மீறல் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய உள்நோக்கங்கள் கொண்ட புகாா்களை மக்களவைத் தலைவா் புறம் தள்ள வேண்டும். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் உணா்வுகளையும், கருத்துகளையும் மத்திய பாஜக அரசு அவமதிப்பது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.

X
Dinamani
www.dinamani.com