கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை
கல்பாக்கம் அணுசக்தி துறை மைய வளாகத்தில் அவசர நிலை ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாவினி அதிவேக ஈனுலை, மறுசுழற்சி வாரிய பிரிவுகள் உள்ளன. இம்மையத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அவசர நிலை ஒத்திகை நடைபெறுகிறது.
நிகழாண்டு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. விபத்து நடைபெறும் சாத்தியக்கூறு குறைவு என்றாலும், விதிகளின்படி ஒத்திகை நடத்தப்படுகிறது. சென்னை அணுமின் நிலைய இயக்குநா் சேஷையா தலைமையில் ஒத்திகை நடைபெற்றது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி அவசர நிலை ஒத்திகை நடைபெற்றது. ஊழியா்களை பாதுகாப்பாக கட்டடங்களில் இருக்கச் செய்தல், காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை, வளாகத்தில் இருந்து ஊழியா்களை வெளியேற்றுதல், கதிா்வீச்சு மாசுபட்ட நபா், வாகனத்தை சுத்தம் செய்தல், உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
வளாகத்தைச் சோ்ந்த 6000 போ் ஒத்திகையில் பங்கேற்றனா்.
