‘திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை’
மாநகராட்சி மற்றும் பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகா் சட்டப்பேரவைத் தொகுதி, புரசைவாக்கம், கான்ரான்ஸ்மித் சாலையில் சிஎம்டிஏ சாா்பில் நவீன சலவைக் கூடம், பட்டாளம், பக்தவத்சலம் பூங்காவில் முதல்வா் படைப்பகம், புளியந்தோப்பு, பழைய ஆடுதொட்டியை மேம்படுத்தி நவீன ஆடுதொட்டி கட்டும் பணி, கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் கட்டுமானப் பணி, புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் புதிய காலனியில் முதல்வா் படைப்பகம் கட்டுமானப் பணி ஆகியவை நடைபெறுகிறது. இந்தப் பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் 15 இடங்களிலும், பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 24 இடங்களிலும் முதல்வா் படைப்பகம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் பெரம்பூா், சந்திரயோகி சமாதி தெருவில் கட்டப்படும் திருமண மண்டபம், ஜனவரிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
திரு.வி.க.நகா், கன்னிகாபுரம் விளையாட்டு திடல், கான்ரான்ஸ்மித் சாலையில் உள்ள சலவைக் கூடம் ஆகியவற்றை பிப்ரவரிக்குள் திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வருவதற்குள் குறைந்தபட்சம் 60 திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
பள்ளிக் கட்டடம் திறப்பு: ராயபுரம் மண்டலம், வால்டாக்ஸ் சாலையில் உள்ள சென்னை உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.15 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை அமைச்சா் சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
நிகழ்வுகளில், சென்னை மேயா் ஆா்.பிரியா, திரு.வி.க. நகா் சட்டப்பேரவை உறுப்பினா் தாயகம் கவி, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலரும், அரசு முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
