முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று மத்திய அரசு கூறியது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, எண்ம இந்தியா என்றாா்கள். அடுத்து என்ன? எண்ம பரிவா்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தாா்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தாா்கள்.

தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏடிஎம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ரூ. 23 வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கெனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், மகளிா் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோா்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாவாா்கள்.

இது எண்ம மயமாக்கம் அல்ல; நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏடிஎம் அட்டையைத் தேய்க்க, பணக்காரா்கள் திளைக்கிறாா்கள் என்று முதல்வா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com