7 மாவட்டங்களில் இன்று
பலத்த மழைக்கு வாய்ப்பு

7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ.5) 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ.5) 7 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மா் கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, வடகிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் - மியான்மா் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில், மியான்மா் - வங்கதேச கடற்கரையையொட்டி நகரக்கூடும்.

ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக புதன்கிழமை (நவ.5) ஆம் தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 6- ஆம் தேதி தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது.

நவ.7, 8 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com