புதுயுகத் தொழில் முனைவு (ஸ்டார்ட் - அப்) நிறுவனங்களை உருவாக்குபவர்கள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு உதவும் நோக்கில் "அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' என்ற மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
இதுகுறித்த சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ஐஐடி-இன் புதுயுகத் தொழில்முனைவு ஆராய்ச்சி மையமும் பேரிடர் நிதியுதவிக்கான ஆராய்ச்சி மையமும் இணைந்து "அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' என்ற மையத்தை தொடங்கியுள்ளது. அனைத்து தரப்பினரும் பயனடைய செய்ய இந்த மையம் மூலம் வகை செய்யப்படுகிறது.
சென்னை ஐஐடி-இல் "தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் மாநாடு' நடைபெற்றது. இதை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதில் தொழில்புரிவதற்கான முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள, அவற்றில் உள்ள சவால்கள் திறம்பட எதிர்கொள்ள சென்னை ஐஐடி பிற அமைப்புடன் இணைந்து பிரத்யேக எண்ம தளத்தை உருவாக்கியுள்ளது. இந்த எண்ம தகவல் தளத்தில் தற்போது 2,75,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 15,000 முதலீட்டாளர்கள், 5,500 முதலீடு செய்யும் நிறுவனங்கள், 1,400 தொழில் ஊக்குவிப்பாளர்கள், 800 வங்கிகள், 110 அரசின் திட்டங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சென்னை ஐஐடி-இன் தொழில் ஊக்குவிப்பு புத்தொழில் நிறுவனமான ஒய்என்ஓஎஸ் ஸும் இதனுடன் இணைந்துள்ளது. முக்கிய தகவல்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே இந்த முயற்சி. இதன்மூலம் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயனடைய முடியும்.
புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.