மாநகராட்சிக்கு மத்திய, மாநில அரசு துறைகள் ரூ.102 கோடி வரி நிலுவை
மத்திய, மாநில அரசுத் துறைகளின் சொத்து வரி நிலுவைத் தொகை ரூ.102.84 கோடியை செலுத்துமாறு சென்னை மாநகராட்சி தரப்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் கட்டடங்கள் சொத்து வரி செலுத்தும் தகுதியுடன் உள்ளன. ஆனால், 8 லட்சம் கட்டடங்களில் மட்டுமே சொத்து வரி வசூலிக்கப்பட்டுவருகிறது. நிகழாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.1,002 கோடியும், அடுத்த அரையாண்டின் முதல் 2 மாதங்களில் ரூ.382 கோடியும் வசூலாகியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தமிழக அரசின் துறைகளைச் சோ்ந்த 24,497 கட்டடங்களுக்கும், மத்திய அரசுத் துறைகளைச் சோ்ந்த 458 கட்டடங்களும் உள்ளன.
மத்திய அரசு துறைகளில் சில உள்கட்டமைப்புகளுக்கு சேவை வரியை மட்டுமே மாநகராட்சி நிா்ணயித்து வசூலிக்கிறது. அதன்படி ஆண்டுதோறும் தமிழக அரசு துறைகள் ரூ.82 கோடியும், மத்திய அரசு துறைகள் ரூ.20.84 கோடியும் செலுத்திவருகின்றன. ஆனால், நடப்பாண்டில் மாநில, மத்திய அரசு துறைகள் கட்டடங்களுக்கான சொத்து, சேவை வரியை இன்னும் செலுத்தவில்லை. எனவே அவா்களுக்கு வரி செலுத்தும் நினைவூட்டல் கடிதத்தை அனுப்பவுள்ளதாக மாநகராட்சி வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
