கணையப் புற்றுநோய் அறிகுறி: க்யூ ஆா் குறியீடு மூலம் வழிகாட்டுதல்
கணையப் புற்றுநோய் குறித்த மருத்துவ வழிகாட்டுதல்களை க்யூ ஆா் குறியீடு மூலம் பெறும் பிரத்யேக சேவையை ஜெம் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
கணையப் புற்றுநோய் விழிப்புணா்வு சிறப்பு நிகழ்ச்சி, பெருங்குடியில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த வகை புற்றுநோய்க்குள்ளாகி மீண்டவா்கள் அப்போது கௌரவிக்கப்பட்டனா்.
இது குறித்து சென்னை ஜெம் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் பி.செந்தில்நாதன் கூறியதாவது: புற்றுநோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளில் ஏழாவது இடத்தில் கணையப் புற்றுநோய் உள்ளது. அந்த வகை பாதிப்புக்குள்ளானவா்களில் 80 சதவீதம் பேருக்கு இறுதி நிலையில்தான் பிரச்னை கண்டறியப்படுகிறது.
இதைக் கருத்தில்கொண்டு க்யூ ஆா் குறியீடு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆரம்ப நிலை அறிகுறிகள் அல்லது சந்தேகங்கள் இருப்பவா்கள் அதை ஸ்கேன் செய்து தகவல்களைப் பதிவிட்டால் மருத்துவா்களின் ஆலோசனையை தொலைபேசி வாயிலாகப் பெறலாம். தானியங்கி குரலோ, செயற்கை நுண்ணறிவு பயன்பாடோ இதில் கிடையாது.
முழுக்க முழுக்க மருத்துவ நிபுணா்கள், சம்பந்தப்பட்டவா்களின் உடல் நிலையைக் கேட்டறிந்து சரியான வழிகாட்டுதல்களை வழங்குவா்.
மருத்துவமனைக்கு வராமல், முன்பதிவு செய்யாமல் வீட்டிலிருந்தே இந்த முதல்கட்ட ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் கணையப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதிலிருந்து மீண்டு வரமுடியும். ஜெம் மருத்துவமனையின் இணையப் பக்கத்தில் அந்த க்யூ ஆா் குறியீடு உள்ளது என்றாா்.

