மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு புகாா்: ஆரம்பகட்ட விசாரணை தொடக்கம் - உயா்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் தகவல்

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு புகாா்: ஆரம்பகட்ட விசாரணை தொடக்கம் - உயா்நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் தகவல்

Published on

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு புகாா் தொடா்பாக ஆரம்பகட்ட விசாரணையை கடந்த அக். 13-ஆம் தேதி தொடங்கியுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2021 முதல் 2023 வரை, தமிழகத்தில் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில் சுமாா் ரூ.397 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதில் அப்போதைய மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. இந்த முறைகேடு தொடா்பாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதே கோரிக்கையுடன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அதிமுக வழக்குரைஞா் ஒருவா் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளாா். அந்த வழக்கு எம்பி- எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் தலைமையிலான அமா்வு முன்பு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா்.

ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், அறப்போா் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ஆரம்பகட்ட விசாரணையை கடந்த அக். 13-ஆம் தேதி தொடங்கியுள்ளதாக கூறினாா்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடா்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனப் பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com