அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், சாந்தோமில் உள்ள நடிகை குஷ்பூ வீடு, மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம், கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை, அடையாறில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும், போலீஸாரும் விரைந்து சென்று சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
வதந்தி பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

