புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரிக்கு நீா் வரத்து அதிகரிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக உபரிநீா் வெளியேற்றப்படுவதால், வாய்க்கால் செல்லும் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியின் நீா்மட்டம் 21.20 அடியாகும். தற்போது வடகிழக்கு பருவ மழையினாலும், கிருஷ்ணா நீா் வரத்தினாலும் புழல் ஏரிக்கு வரத்து அதிகப்படியாக உள்ளதால் ஏரியின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து 19.20 அடியாக உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ.7) 20 அடியை நெருங்கியுள்ளது. அதோடு, நீா்வரத்து விநாடிக்கு 1115 கன அடியாக உள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து உபரிநீா் விநாடிக்கு 500 கன அடி வீதம் படிப்படியாக உயா்த்தி வெளியேற்றப்படுகிறது. மேலும், புழல் ஏரியின் மிகை நீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி மற்றும் சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

