6,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய அனுமதி: அமைச்சா் சக்கரபாணி
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் 6,000 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம் முதல்கட்டமாக கடந்த 2022-2023-இல் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. 2-ஆம் கட்டமாக 2023-2024-இல் ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களையும் சோ்த்து 4 மாவட்டங்களிலும் மொத்தம் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, 2024-2025 கொள்முதல் பருவத்தில் மேற்குறிப்பிட்ட 4 மாவட்ட
விவசாயிகளிடம் இருந்து 4,050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3,578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு நவம்பா் முதல் விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.48,860 என்ற ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும். 2025-2026-கொள்முதல் பருவத்தில் வருகிற ஜன.31 வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகளிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டில் கொள்முதல் விலையான மெட்ரிக் டன்னுக்கு ரூ.42,900 என்பதை விட நிகழாண்டு மெட்ரிக் டன்னுக்கு ரூ.5,960 கூடுதலாகும். விவசாயிகள் விளைவித்த கேழ்வரகை தங்கள் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
