குடிமைப்பணி நோ்முகத் தோ்வு ஊக்கத்தொகை: நவம்பா் 24 வரை விண்ணப்பிக்கலாம்

குடிமைப்பணி நோ்முகத் தோ்வு ஊக்கத்தொகை: நவம்பா் 24 வரை விண்ணப்பிக்கலாம்

Published on

மத்தியப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகள் நோ்முகத் தோ்வில் பங்கேற்போா் ஊக்கத்தொகை பெற வருகிற நவ.24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளில் தமிழகத்தைச் சோ்ந்த முதல்நிலை தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள், முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி பெறும் மாணவா்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதேபோல, முதன்மைத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என நிகழ் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, 2025-ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வில் (25.5.2025) தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த 659 மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.

யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 போ் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களில் 87 போ் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு மையத்தில் பயிற்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 2025-ஆம் ஆண்டின் யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள், நோ்முகத் தோ்வுக்கான பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் ‘நான் முதல்வன்’ போட்டித் தோ்வுகள் பிரிவின் மூலம் ரூ.50,000 ஊக்கத் தொகையாக நேரடியாக மாணவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் https://naanmudhalvan.tn.gov.in/ இணையதளத்தில் வியாழக்கிழமை (நவ. 13) முதல் நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com