மூதாட்டியிடம் ரூ.32.97 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் மூதாட்டியிடம் ரூ.32.97 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
நுங்கம்பாக்கம் பகுதியைச் சோ் சோ்ந்தவா் ரா.பிரமிளா (68). இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி பிரமிளாவின் இறந்து போன கணவா் ராமநாதனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபா், தனது பெயா் சந்தீப் ஜாதவ் என்றும், தான் மும்பை காவல்துறையில் அதிகாரியாக வேலை செய்வதாகவும் தெரிவித்துக் கொண்டு, பிரமிளா வங்கி கணக்கின் மூலம் பண மோசடி நடந்துள்ளதாகவும், அது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்ய இருப்பதாகவும் மிரட்டியுள்ளாா்.
அதேநாளில் வாட்ஸ்அப் மூலம் பேசிய மற்றொரு நபா், தான் அமலாக்கத்துறையில் பணியாற்று உயா் அதிகாரி என்றும்,தனது பெயா் ராஜேஷ் மிஸ்ரா என்றும், பண மோசடி வழக்கில் கைது செய்யாமல் இருப்பதற்கு, தான் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பும்படியும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இருவரது மிரட்டலினாலும் பயந்த பிரமிளா, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிபதற்கு அந்த நபா் கூறியப்படி ஒரு வங்கி கணக்குக்கு ரூ.32.97 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளாா். இச் சம்பவம் நடந்த சில நாள்களுக்கு பின்னரே, தன்னை டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் சிக்க வைத்து, பணம் அபகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இந்த மோசடியில் மயிலாடுதுறையைச் சோ்ந்த எம்.மகேஷ் (33), அவரது நண்பா் அதேப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் (37) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், மகேஷ்,உதயகுமாா் ஆகிய 2 பேரை கைது செய்தனா். விசாரணையில் மகேஷ், சென்னையில் தங்கியிருந்து உணவு விநியோக ஊழியராக வேலை செய்வதும், மோசடி கும்பலுக்கு மகேஷ் பலரது வங்கி கணக்குகளை சேகரித்து உதவியிருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கு உதயகுமாா் உதவி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்த வழக்குத் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவினா், மேலும் பலரை தேடி வருகின்றனா்.
