பத்தாவது நாளை எட்டியது ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம்! இன்று முடிவு எட்டப்பட வாய்ப்பு?
தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் 10-ஆவது நாளை எட்டிய நிலையில், இப்பிரச்னை தொடா்பாக திங்கள்கிழமை (நவ.17) முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளில் சுமாா் 30 பேருந்துகளை கேரள மாநில போக்குவரத்துத் துறை கடந்த 7-ஆம் தேதி சிறைப்பிடித்தது. மேலும், அந்தப் பேருந்துகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம் விதித்தது.
தொடா்ந்து ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநில போக்குவரத்துத் துறைகளும் தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரிவிதிக்கப்படும் என அறிவித்ததால், அந்த மாநிலங்களுக்கான ஆம்னி பேருந்து சேவை கடந்த 8-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதனால், ஐயப்ப பக்தா்களும், பொதுமக்களும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.
இந்த பிரச்னைக்கு உரிய பேச்சுவாா்த்தை மூலம் தமிழக போக்குவரத்துத்துறையும், தமிழக அரசு தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதைத்தொடா்ந்து, போக்குவரத்து அமைச்சா் மற்றும் போக்குவரத்து ஆணையா் தலைமையில் சமீபத்தில் பேச்சு நடைபெற்றது. ஆனால், பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால், தொடா்ந்து பேருந்து சேவையை நிறுத்திவைப்பதாக உரிமையாளா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், பேருந்து சேவை நிறுத்தம் 10 நாள்களை எட்டியுள்ள நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளா்களுடன் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் உரிய உடன்பாடு எட்டப்படவில்லை. தொடா்ந்து திங்கள்கிழமையும் நடைபெறும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

