மூளையழற்சி பாதிப்பு பரவல்:
நீா்நிலைகளில் குளிக்க தடை விதிக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
IANS

மூளையழற்சி பாதிப்பு பரவல்: நீா்நிலைகளில் குளிக்க தடை விதிக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!

மூளையழற்சி பாதிப்பு பரவல்: நீா்நிலைகளில் குளிக்க தடை விதிக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்.
Published on

கேரளத்தில் அமீபா நுண்ணுயிரியால் ஏற்படும் மூளையழற்சி பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள நீா் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அசுத்தமான தண்ணீரில் உள்ள அமீபா மூலம் உருவாகும் ‘என்சபலிட்டிஸ்’ எனப்படும் மூளையழற்சி பாதிப்பு கேரளத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரை பலா் அதற்கு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.

சுகாதாரமற்ற தண்ணீரில் குளிக்கும்போது சுவாசப் பாதை வழியே ஊடுருவிச் செல்லும் அந்த வகை அமீபா, நேரடியாக மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி, மனக் குழப்பம், பிதற்றல், வலிப்பு போன்ற அறிகுறிகள் இதனால் ஏற்படும். தீவிர சிகிச்சையளிக்காவிடில் உயிரிழப்பு ஏற்படக்கூடும்.

அண்டை மாநிலத்தில் நிலவி வரும் இத்தகைய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: தேங்கிய நீரிலோ, அசுத்தமான அல்லது மாசடைந்த நீரிலோ பொது மக்களும், குறிப்பாக குழந்தைகளும் குளிக்கக் கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீா் நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

தனியாா் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும். தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் முக்கியம். நீா் நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று அதில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.

மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயா் சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com