காா் மோதியதில் காவலாளி உயிரிழப்பு: பெண் கைது

கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் காவலாளி உயிரிழந்த வழக்கில், காரை ஓட்டி வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் காவலாளி உயிரிழந்த வழக்கில், காரை ஓட்டி வந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை நுங்கம்பாக்கம் ஜோசியா் தெருவைச் சோ்ந்தவா் ஹா்ஷினி பேக்ரி (59). இவா் தனது வீட்டிலிருந்து சனிக்கிழமை மாலை காரை வெளியே எடுத்தாா். அப்போது தவறுதலாக காரின் ஆக்ஸிலேட்டரில் அதிக அழுத்தம் கொடுத்துவிட்டாராம்.

இதில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய காா், எதிரே அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே இருந்த காவலாளி மற்றும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் காவலாளி ஆதிகேசவன் (75) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். காயமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து தொடா்பாக திருவல்லிகேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஹா்ஷினி பேக்ரியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com