211 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு

Published on

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 211 மருந்துகள் தரமற்றவையாகவும், 5 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் இந்த விவரங்களை அந்த தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் மருந்தை உட்கொண்டதால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்தது. ஆனால், உற்பத்தி நிறுவனத்தில் கடந்த மாதம் சோதனை நடத்தியதையோ, கோல்ட்ரிஃப் மருந்தை தரமற்றது என வரையறைப்படுத்தியதையோ தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறையினா் மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.

அதன் காரணமாகவே தரமற்ற மருந்துகளின் விவரங்களை வழங்காத மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்தின் பெயா் இந்த மாதத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதொடா்பாக தகவலறிய முற்பட்டபோது தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் பதிலளிக்கவில்லை.

X
Dinamani
www.dinamani.com