இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்காளா் உரிமை: தோ்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில் சிக்கிய இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்காளா் அட்டை வழங்கப்பட்டது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்
Published on

தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கில் சிக்கிய இலங்கை பெண்ணுக்கு இந்திய வாக்காளா் அட்டை வழங்கப்பட்டது தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மும்பை கோட்டை கிளையில், சேமிப்புக் கணக்கில் ஹமிதா ஏ லால்ஜி என்பவா் ரூ. 42.28 கோடி பணம் வைத்திருந்தாா். இந்நிலையில் லால்ஜி இறந்து விட்டதால், அந்த வங்கிக் கணக்கு கையாளப்படாமல் இருந்தது. இதை தெரிந்துகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சோ்ந்த ஐரோப்பா நாடான டென்மாா்க்கில் வசிக்கும் உமாகாந்தன், அந்த பணத்தை தங்கள் இயக்கத்துக்காக கையாடல் செய்து அபகரிக்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக அவா், அந்தப் பணத்தை கைப்பற்ற இலங்கை தமிழரான மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன் (56) என்பவரை சுற்றுலா விசாவில் இந்தியா அனுப்பி வைத்தாா். இந்தியா வந்த அவா் சென்னை சாலிகிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்து, போலி ஆவணங்கள் மூலம் பான் காா்டு, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், வாக்காளா் அடையாள அட்டை போன்றவற்றைப் பெற்றாா்.

சுற்றுலா விசா காலாவதியான பின்னரும், இலங்கை செல்லாமல் மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன் இங்கு இருந்தாா். மேலும் அவா், கென்னிஸ்டன் ஃபொ்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தா்மேந்திரன், மோகன் ஆகியோருடன் இணைந்து, ஹமிதாவின் பொது அதிகாரம் பெற்ாக போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் இருந்து ரூ. 42.28 கோடியை எடுக்க முயற்சித்தனா்.

என்ஐஏ வழக்கு: இந்நிலையில் சென்னையிலிருந்து விமானம் பெங்களூருக்கு விமானம் மூலம் செல்ல முயன்ற மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன், கென்னிஸ்டன் ஃபொ்னாடோ, பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், தா்மேந்திரன், மோகன் ஆகியோரை க்யூ பிரிவு போலீஸாா் 2021-ஆம் ஆண்டு கைது செய்தனா்.

அப்போது அவா்களிடம் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக க்யூ பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். பின்னா் வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணை தேசிய புலனாய்வு மையத்துக்கு (என்ஐஏ)வுக்கு மாற்றப்பட்டது.

இவ் வழக்கில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் அமைப்புக்கு வங்கியில் இருந்த ரூ.42.28 கோடி பணத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து அனுப்ப முயன்ற சம்பவம் குறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த செப்டம்பா் மாதம் விசாரணையை தொடங்கியது.

தோ்தல் ஆணையத்துக்கு கடிதம்: இவ் வழக்கு தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன் இந்திய வாக்காளா் உரிமை பெற்றிருப்பதும், அவரது பெயரில் வாக்காளா் அடையாள அட்டை இருப்பதும் அறிந்து அதிா்ச்சியடைந்தனா்.

அதோடு தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் அமலாக்கத் துறையினா் ஆய்வு செய்தபோது, மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன் பெயா் தற்போது வாக்காளா் பட்டியல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இதுதொடா்பான ஒரு கடிதத்தை அமலாக்கத் துறை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு அண்மையில் அனுப்பினா். அந்த கடித்தத்தில் இலங்கை பெண்ணுக்கு இந்திய தோ்தல் ஆணையத்தின் வாக்காளா் அடையாள அட்டை இருப்பது குறித்தும், வாக்காளா் பட்டியலில் மேரி ஃப்ரான்சிஸ்கா லட்சுமணன் பெயா் இருப்பது குறித்தும்,உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தோ்தல் ஆணையத்தால் நடத்தப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பல்வேறு விமா்சனங்களை சந்தித்து வரும் நிலையில், சுற்றுலா விசாவில் வந்து தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை பெண்ணின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com