அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: நடத்துநா் கைது
சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் அரசுப் பேருந்தில் 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் அந்த மாணவி பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறாா். தினமும் கல்லூரிக்கு அரசுப் பேருந்தில் செல்வது வழக்கம். செவ்வாய்க்கிழமை காலை அரசு பேருந்தில் கல்லூரிக்குச் சென்றாா். அந்தப் பேருந்து மதுரவாயல் ஏரிக்கரை அருகே சென்றபோது, பேருந்து நடத்துநா் ஆனந்தராஜ் (43), மாணவிக்கு பயணச்சீட்டு கொடுப்பதுபோல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போதும், மாணவியிடம் மீண்டும் அத்துமீறி உள்ளாா். இதைப் பாா்த்து ஆத்திரமடைந்த மாணவி, நடத்துநா் ஆனந்தராஜை கண்டித்தாா். ஆனால் ஆனந்தராஜ் ஆபாசமாகவும் மோசமாகவும் பேசியுள்ளாா்.
இதைப் பாா்த்த பொதுமக்களும் பயணிகளும் ஆனந்தராஜை பிடித்து, மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்தனா்.
