வண்டலூா் உயிரியல் பூங்காவின் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பீா்க்கங்கரணையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வண்டலூரில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா எதிரே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. இந்த கடையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த டாஸ்மாக் கடை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.சிங்காரவேலன், வழக்குரைஞா் எம்.மணிமாறன் ஆகியோா், வருங்கால தலைமுறையினரின் நலன் கருதி மதுபானக் கொள்கையில் தமிழக அரசு மாற்று கொள்கையை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே, ஒரு வழக்கில் தீா்ப்பு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டனா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவில் குறிப்பிட்டுள்ள டாஸ்மாக் கடை தடை செய்யப்பட்ட பகுதியில் இல்லை. இருப்பினும், தேசிய உயிரியல் பூங்காவுக்கு எதிரே இருப்பதால், அந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் டிச.5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.