சாம்சங் தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தீா்வு காண வேண்டும் என தொழிலாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாம்சங் நிறுவனத்தில் சங்கம் அமைத்த காரணத்துக்காக 27 நிா்வாகிகளை அந்நிறுவனம் பணியிடை நீக்கம் செய்தது. அதேபோல், அந்நிறுவனத்துக்கு உதிரிபாகம் தயாரிக்கும் எஸ்.எஸ்.எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையிலும் சங்கம் அமைத்ததற்காக நிரந்தர தொழிலாளா்கள் 93 பேரை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதுதொடா்பாக தமிழக அரசு தலையிட்டு தீா்வு காண்பதுடன், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சாம்சங் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் இ.முத்துக்குமாா் தலைமையில், தொழிலாளா்கள் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகத்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, தொழிலாளா்கள் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்பட்டது.