வரதட்சணை கொடுமை: கணவா் கைது!

மனைவியிடம் ரூ.1.60 கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரின் கணவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸாா் கைது செய்தனா்.
Published on

மனைவியிடம் ரூ.1.60 கோடி கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரின் கணவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவொற்றியூா் காலடிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அனிலா ரேச்சல் (32). இவரது கணவா் மரிய ஜோஸ் சாஜின். இவா்களுக்கு 2023-இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அனிலா ரேச்சல் வீட்டாா் 215 பவுன் நகைகள், ரொக்கமாக ரூ.10 லட்சம், காா் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனா்.

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் மரிய ஜோஸ் சாஜின் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளாா். பின்னா், 3 மாதம் கழித்து திரும்பி வந்தவா், உடன் அனிலா ரேச்சலையும் வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு, இருவரும் வேலை பாா்த்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், கூடுதல் வரதட்சணையாக ரூ.1.60 கோடி, 7 சென்ட் இடம் கேட்டு கணவன் மரிய ஜோஸ் சாஜின் துன்புறுத்தியுள்ளாராம். இதனால், சென்னையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு 2024 ஜூனில் வந்த அனிலா ரேச்சல் இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

நீதிமன்ற உத்தரவின்பேரில், திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மரிய ஜோஸ் சாஜினை தேடி வந்தனா்.

இதனிடையே வெளிநாட்டில் இருந்து அண்மையில் தமிழகம் வந்த மரிய ஜோஸ் சாஜின் மீண்டும் வெளிநாடு செல்வதற்காக சனிக்கிழமை சென்னை விமான நிலையம் வந்துள்ளாா்.

அவரை குடியுரிமை அதிகாரிகள் பிடித்து திருவொற்றியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, மரிய ஜோஸ் சாஜினை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com