

நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் 'சைபர் விழிப்புணர்வு நாள்'(சைபர் ஜக்ரூக்தா திவாஸ்) மற்றும் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தையொட்டி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இணைந்து டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பொறுப்பான முறையில் ஆன்லைனைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா இந்த நிகழ்வை தொடங்கிவைத்தார். தற்போதைய டிஜிட்டல்மயத்தில் வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பில் வங்கி முக்கியத்துவம் அளிப்பதாகவும் வாடிக்கையாளர்கள் பாதுகாப்புக்கு உறுதி பூண்டுள்ளதாகவும் கூறினார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை கண்காணிப்பு அதிகாரி ராஜீவ் குமார் பேசுகையில், சைபர் பாதுகாப்பு என்பது ஒரு தொழில்நுட்ப கேடயம் மட்டுமல்ல, எச்சரிக்கை, பொறுப்பின் பகிரப்பட்ட கலாசாரம் என்று வலியுறுத்தினார்.
அதேபோல, பாதுகாப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு கூட்டு கண்காணிப்பும் விழிப்புணர்வும் முக்கியம் என வங்கியின் தலைமை பொது மேலாளர்கள் நடராஜ் கார்யம்புடி, அரபிந்திர மோகன் பானர்ஜி ஆகியோர் தெரிவித்தனர்.
வரவேற்புரை அளித்த வங்கியின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி எஸ். ராதாகிருஷ்ணன், சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் தொடர் முயற்சிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வலியுறுத்திப் பேசினார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் சிங்கராயர், வளர்ந்து வரும் அச்சுறுத்தல் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அக்டோபர் மாதம் முழுவதும் சைபர் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்த, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துடன் இணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
த்ரெட் பஸ்டர், என்க்ரிப்ஷன் கேம், இன்பாக்ஸ் சேலஞ்ச், சைபர் ட்ரெயில் போன்ற செயல்பாட்டு வழிமுறைகள், விழாவில் பங்கேற்றவர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தின.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள், செய்யறிவு(ஏஐ) மோசடிகள், ஃபிஷிங் தாக்குதல், அடையாளங்களைத் திருடுதல், டீப்ஃபேக் ஆள்மாறாட்டம், வங்கி உள்ளிட்ட கணக்குகளை கையகப்படுத்துதல் என வளர்ந்து வரும் பல வகையான சைபர் குற்றங்கள் குறித்து உரையாடியது, வாடிக்கையாளர்கள் இதனை எளிதாக புரிந்துகொள்ள உதவியது.
போலி போன் அழைப்புகள், அவசர கட்டண கோரிக்கைகள், ரகசிய விவரக் கோரிக்கைகள் போன்ற ஆபத்து நிறைந்த சைபர் தாக்குதல் குறித்து நிபுணர்கள், பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதுபோன்ற நேரத்தில் அதிகாரபூர்வ ஆதாரங்களைச் சரிபார்த்தல், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் இருந்தால் உடனடியாகப் புகாரளித்தல் போன்ற முக்கிய பாதுகாப்பு நடைமுறைகளை அறிவுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வு 'சைபர் விழிப்புணர்வில் இந்தியா' என்ற தொலைநோக்கு பார்வையை முன்வைத்துள்ளது. இதில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சைபர் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு என்பதையும் விழிப்புணர்வுதான் முதல் வலிமையான பாதுகாப்பு என்பதையும் இந்த நிகழ்வு நிரூபித்துள்ளதாக இதில் கலந்துகொண்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.