

புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி முதல்கட்டமாக ஏரியில் இருந்து 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே வேகமாக நிரம்பி வருகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரியில் 3,006 மி.கன அடி நீர் நிரம்பியுள்ளது.
மொத்தம் 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.97 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 325 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 184 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது புழல் ஏரி 91.09 சதவீதம் நீர் இருப்பை நெருங்கிய நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதல்கட்டமாக 200 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறை அதிகாரிகள் பூஜை செய்து ஏரியின் 2 மதகுகளை திறந்தனர்.
இந்த உபரிநீர் 13.5 கி.மீ. கால்வாய் வழியாக எண்ணூர் கடலில் கலக்கிறது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், சாமியார் மடம், தண்டல்கழனி, பாபா நகர், வடபெரும்பாக்கம், மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்வதால், கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் கால்வாய் அருகில் சென்று வேடிக்கை பார்ப்பதோ, செல்பி எடுப்பது, ரீல்ஸ் பதிவிடுவது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்தச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.