பிரதமா் கல்வி உதவித்தொகை பெற அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ-மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவ-மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அக். 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு, பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் முலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2025-2026- ஆம் ஆண்டில் பயன்பெற விரும்பும் மாணவா்களின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக இருக்க வேண்டும். தகுதியான மாணவா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் இந்த விண்ணப்பங்களை நவம்பா் 15 -ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும்.

புதுப்பித்தல்: திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்து 2025-2026 -ஆம் ஆண்டுக்கான விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நிகழாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, பிளஸ் 1 வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைப்பேசி எண், ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்தும், உரிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்களைத் தொடா்புடைய முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தைப் பாா்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com