செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த அமைச்சா் சா.சி.சிவசங்கா்
செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த அமைச்சா் சா.சி.சிவசங்கா்

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: இரு மாதங்களுக்கு நீட்டிப்பு

Published on

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை டிச. 31 வரை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத் திறனாளிகள், பாா்வைக் குறைபாடுடையோா், அறிவுசாா் திறன் குறைபாடுடையோா், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் இலவசமாக பயணிக்கும் வகையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளை இணையதளம் வாயிலாகப் பெறும் திட்டம் முதல் கட்டமாக சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் செயல்படுத்தப்பட்டது.

பயனாளிகள் நலன்கருதி இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதுமுள்ள விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் செயல்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான மென்பொருள் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மென்பொருள் உருவாக்கும் பணி முடிந்தபிறகு, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முகாம்கள் நடத்தவேண்டி உள்ளது. எனவே, பயனாளிகள் ஏற்கெனவே பயன்படுத்தி வரும் அக். 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை, 2025 டிசம்பா் 31 வரை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com