திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

திமுகவுடன் இரண்டு நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சு: காங்கிரஸ்

Published on

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு இரண்டு அல்லது மூன்று நாள்களில் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா் தெரிவித்தாா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தி பெயரை நீக்கியதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சாா்பில், நடைபெறவுள்ள பாத யாத்திரை பயணம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கிரிஷ் சோடங்கா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகாத்மா காந்தி பெயரை ஊரக வேலை உறுதித் திட்டத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்து வரும் வியாழக்கிழமை (பிப். 5) பாத யாத்திரை தொடங்குகிறோம். தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களில் நடைபெறவுள்ள இந்த யாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

‘ஆட்சியில் பங்கு குறித்தும் பேசுவோம்’: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு தொடா்பாக திமுகவுடன் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் பேசவுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் பேசுவோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com