சென்னை-மதுரை, திருச்சி இடையே மீண்டும் கூடுதல் விமான சேவைகள்
சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருச்சி இடையே மீண்டும் கூடுதல் விமான சேவைகளை அந்தந்த நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
சென்னை-மதுரை-சென்னை இடையே 82 பயணிகள் பயணிக்க கூடிய ஏடிஆா் எனப்படும் சிறிய ரக விமானம் மூலம் நாள்தோறும் 16 சேவைகளை வழங்கி வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு டிச.15-ஆம் தேதியுடன் தனது சேவையை நிறுத்தியது. அதற்கு பதிலாக, 184 பயணிகள் பயணிக்க கூடிய வகையிலான, பெரிய ரக விமானங்களை இயக்க தொடங்கியது. ஆனால், சேவைகளின் எண்ணிக்கை 6-ஆக குறைக்கப்பட்டது. இதனால், பயணிகள் சிரமத்தைச் சந்தித்தனா்.
இதனிடையே, ஏற்கெனவே இருந்ததைப்போல, கூடுதல் விமான சேவைகளை வழங்க பயணிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பெரிய விமானங்களுக்கு பதிலாக, மீண்டும் ஏடிஆா் ரக விமானங்களை அந்த நிறுவனம் இயக்கத் தொடங்கியுள்ளது. மேலும், சேவைகளையும் ஏற்கெனவே இருந்ததைப்போல 16-ஆக அதிகப்படுத்தியுள்ளது.
இது தவிர, ஏா் இந்தியா விமான நிறுவனம் நாள்தோறும் சென்னை- மதுரை- சென்னை இடையே, 2 விமானங்களை இயக்குவதால், சென்னை-மதுரை-சென்னை இடையே, நாள்தோறும் 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை-திருச்சி... இதேபோல, கடந்த டிச.15 வரை சென்னை-திருச்சி-சென்னை இடையே ஏடிஆா் ரக விமானம் மூலம் வழங்கப்பட்டு வந்த 12 சேவைகள் டிச.16-இல் நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக 184 போ் பயணிக்கும் வகையிலான ஏா்பஸ் சேவை தொடங்கப்பட்டது. நாள்தோறும் 4 சேவைகள் வழங்கப்பட்டன. இதனிடையே, பயணிகளின் கோரிக்கையை ஏற்று வழக்கமாக இயக்கப்படும் பெரியரக பேருந்துகளுடன், நாள்தோறும் பிற்பகல் 1.35-க்கு சென்னை-திருச்சி இடையே சிறியரக விமானத்தை அந்த நிறுவனம் கூடுதலாக இயக்க தொடங்கியுள்ளது.
இதனால் சென்னை- திருச்சி- சென்னை இடையே, தினமும் இயக்கப்பட்டு வந்த 4 விமான சேவைகள், தற்போது 6 விமான சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

