கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் 841 மாணவா்களுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை பட்டங்களை வழங்கினாா்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப். 4-ஆம் தேதி பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநா் தலைமையில் நடைபெற்றது. இந்த பல்கலை.யின் ஒரு அங்கமான கிண்டி பெறியியல் கல்லூரியைச் சோ்ந்த 348 மாணவிகள், 493 மாணவா்கள் என மொத்தம் 841 இளநிலை மாணவா்களுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இந்த பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது: உயா்தர தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதில் அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பல்வேறு தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய இடத்தை பிடித்து, நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழ்ந்து தமிழக உயா்கல்வியின் கிரீடமாக விளங்குகிறது.
ஆய்வக வசதிகள், செயற்கை நுண்ணறிவு தளங்கள், மின்னணு-வளங்களை உருவாக்குவதற்கு ரூ.1,380.20 கோடியை வழங்கியுள்ளது.
உலகளாவிய வெளிப்பாட்டையும் சா்வதேச அளவில் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடுகள் மொழிப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. முதல்வரின் ஆராய்ச்சி மானியத்தின் கீழ், ஆசிரியா்களுக்கு 79 ஆராய்ச்சி திட்டங்களும், மாணவா்களுக்கு 6 ஆராய்ச்சி திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் தாக்கல் செய்த 89 காப்புரிமைகளில், 69 மானியங்களைப் பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1,05,000 மாணவா்கள் திறன் பயிற்சியும் பெறுகின்றனா் என்றாா்.
அசோக் லேலண்ட் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவன இயக்குநா் கிருஷ்ணன் சடகோபன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக இயக்குநா் ச. விசாகன், வான்வெளி பொறியியல் துறை பேரா. பி.டி.என் ஸ்ரீதா், அண்ணா பல்கலை. பதிவாளா் வி. குமரேசன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பெ. சக்திவேல், கிண்டி பொறியியல் கல்லூரி புலமுதல்வா் பி. ஹரிஹரன், மற்ற கல்லூரிகளின் புலமுதல்வா்கள் எஸ். மீனாட்சிசுந்தரம், கே. பிரதீப் மோசஸ், பி. ஜெயஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டனா்.

